Sunday, May 15, 2011

உலகைக் குலுக்கிய புத்தகங்கள்...!

கண்ணீருக்குப் பதிலாகப் புரட்சி!

ரு இருபத்தொன்பது வயது இளைஞனும் ஒரு இருபத்தேழு வயது இளைஞனும் சேர்ந்து ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார்கள் அது உலகையே புரட்டிப் போட்டது.

அந்த இளைஞர்கள் - மார்க்ஸ், எங்கெல்ஸ்.

அந்த புத்தகம் - 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை'  


சுமார் 160 ஆண்டுகளுக்கு முன் 1848 ஆம் ஆண்டில் இதை அவர்கள் வெளியிட்டார்கள். அன்று பாட்டாளி வர்க்கம் பட்ட பாட்டை கண்டு பலர் கண்ணீர் விட்டார்கள். அவர்களது இனிய வாழ்க்கை பற்றிக் கனவு கண்டார்கள்.
ஆனால் மார்க்சும், எங்கெல்சும் கண்ணீருக்குப் பதிலாக புரட்சியை முன்வைத்தார்கள். அறிவியல் அடிப்படையிலான கம்யூனிச சித்தாந்தத்தையும், உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கியவர்கள் அவர்களே. இந்த புத்தகம் வெளியாகி 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1872 ஆம் ஆண்டில்  மார்க்சும், எங்கெல்சும் இதற்கு ஒரு முன்னுரை எழுதினார்கள். அதில் அவர்கள் கூறியுள்ள ஓர் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ளத் தவறிவிடக் கூடாது. "இந்த அறிக்கையின் பொதுவான கொள்கைகள் இன்றும் சரியானவையே. எனினும் இந்தக் கொள்கைகளை நடைமுறையில் செயல்படுத்துவது என்பது, அவ்வப்போது உள்ள வரலாற்று நிலைமைகளைச் சார்ந்தே இருக்கும்" என்று அவர்கள் தெளிவாக்கினார்கள். 

இதற்கேற்ப, அன்று முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இந்தியாவில், தமிழ்நாட்டின் தனித்தன்மைகள் போன்றவற்றையும் மார்க்சிய - லெனினிய வெளிச்சத்தில் கற்க வேண்டும்; ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும். 

இதற்கான அருமையான தொடக்கமாக அமையும் மகத்தான புத்தகமே 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை'.  


காரல் மார்க்சின் மூலதனம் 

'மூலதனம்' ஒரு அற்புதமான, முன்பின் முரணற்ற, மாபெரும் சமூக, பொருளாதார ஆய்வுப் பற்றி, மானுட வரலாற்றைப் பற்றி, குறிப்பாக முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்க விதிகளைப் பற்றி மகத்தான வெளிச்சம் அளித்த நூல் 'மூலதனம்'. அறிவுபூர்வமாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் 'மூலதனம்' மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான நூல். 


மிக முக்கியமாக இங்கு கூற வேண்டியது, 'மூலதனம்' சிறந்த இலக்கியப் படைப்பு என்பதாகும். அது எழுதப்பட்டது ஜெர்மன் மொழியில். ஆங்கில மொழியாக்கம் பெருத்த வரவேற்ப்பை பெற்றது. 'மூலதனம்' மகிழ்ச்சியும், விழிப்புணர்வும் அளிக்குமென்றால் அது மிகையாகாது. ஒவ்வொருமுறை படிக்கும்பொழுதும் புது வெளிச்சம் தரும். சோஷலிஸ - பொதுவுடைமை லட்சியங்களுக்காகப் பாடுபட உத்வேகமும் புத்துணர்ச்சியும் தரும் மகத்தான நூல். 


உயிரினங்களின் தோற்றம் 

ன்றுவரை அனைத்தும் அவன் செயல் என்றே மனித குலம் பொதுவாகக் கருதி வந்தது. ஏனெனில் புதிர்களில் எல்லாம் பெரிய புதிராய் எந்தத் தத்துவஞானிக்கும் கூடப் பிடிபடாததொரு விடுகதையாய் அவிழ்க்கப்படாத முடிச்சாகவே படைப்பின் ரகசியம் இருந்து வந்தது. அதை அப்படியே பத்திரமாகப் பாதுகாப்பதில் தேவாலயத்தின் தலைமை மிகுந்த அக்கறை கொண்டிருந்தது. ஏனெனில் சமூகத்தின் மீதான தனது பிடி அறிவியல் சார்ந்த சிந்தனையால் ஆட்டங்கண்டு வருவதை அதனால் சகித்திட இயலவில்லை. 

அத்தகையதொரின் வரிசையில் சடப்பொருட்களிருந்து உயிர்னங்களின் தோற்றம், அந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் பிறப்பு எனும் சங்கிலித்தொடர் போன்ற இயற்கையின் போக்கை தர்க்கவாதக் கண்ணோட்டத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்த விஞ்ஞானிகளில் சார்லஸ் டார்வின் எனும் ஆங்கிலேய விஞ்ஞானிக்கு தனிச் சிறப்பு உண்டு. 
ஏனெனில் அவரின் ஒப்புயர்வற்ற நூலான 'இயற்கைத் தேர்வு மூலம் உயிரினங்களின் தோற்றம்' வெளிவந்த 24.11.1859 அன்றுதான் மனிதகுலம் தனது வேர் எது, விழுது எது எனப் புரிந்து கொண்டது.


'மாறிக்கொண்டே இருக்கும் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் நுட்பம் தெரிந்த உயிரினங்களே இப்புவியில் தப்பிப் பிழைக்கும்; மற்றவை அழிந்து போகும் எனும் உண்மையை அந்த நூல் உரக்கப் பேசியது.

மார்க்சின் மனம் கவர்ந்த டார்வின் நூலாகிய இந்த 'உயிரினங்களின் தோற்றம்' தமிழ் கூறும் நல்லுலகிற்கு இதுகாறும் முழுமையான வடிவில் கிடைக்கப் பெறவில்லையே எனும் குறை அதன் 150 ஆம் ஆண்டிலும் தொடரக் கூடாது எனும் நல்லெண்ணத்தில் பாரதி புத்தகாலயம் அதனை முழுமையாக மொழிமாற்றம் செய்திட விழைகிறது. அதற்கு வாசக நண்பர்களின் வரவேற்பு நிச்சயம் கிட்டும்.


ரூசோவின் 'சமுதாய ஒப்பந்தம்'

"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" எனும் மனித உரிமை முழக்கங்களை 18 ஆம் நூற்றாண்டில் உலகிற்குத் தந்த சிந்தனையாளர் ரூசோ. தனது வாழ்க்கை வரலாற்றை 'The Confessions of jean jacques Rousseaw' எனும் தலைப்பில் எழுதியுள்ளார். 

'மனிதன் சுதந்திரத்தோடு தான் பிறக்கிறான்; ஆனால் எங்கு நோக்கினும் அவன் அடிமைத் தளைகளில் பிணைக்கப்பட்டே காட்சி அளிக்கிறான்'.

'அமைதி நிறைந்த அடிமைத்தனத்தைவிட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது'.

'பல கடவுள்களும், பல மதங்களும் உலகத்தில் துன்பத்தைத்தான் புகுத்தியுள்ளன' 

'கடவுளைத் தொழுவதற்கு வேத புத்தகமும், ஆலயமும், சடங்குகளும், இடையில் தரகர் வேலை செய்யும் குருமார்களும் தேவையில்லை'. 

'நேர்மையும், பொறுப்பும், கண்ணியமும் உள்ள ஓர் மனிதனை உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம் தேடுகிறேன்; ஆனால் இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை'. 

'கலைகளின் மீது ஈடுபடும் கவனமும் ஏற்பட்டால் அவை கடைசியில் பகட்டில் தான் போய் முடியும். எந்த இனத்திற்குக் கலாச்சாரப் பகட்டிலே பிடிப்பு உண்டாகி விடுகிறதோ அந்த இனம் போராட்டப் பண்பை துறந்து விடுகிறது'. 

இவையெல்லாம் சிந்தனையாளர் ரூசோவினின்றும் வெளிப்பட்ட சிந்தனை முத்துக்கள் சில. 

ரூசோ மூட்டிய விடுதலை வேட்கை எனும் நெருப்பு பின்னாளில், பிரெஞ்சுப் புரட்சிக்கும், அமெரிக்க விடுதலைக்கும் அடிகோலியது என்றால் அது மிகையில்லை. இவ்விரு நாட்டின் சுதந்திரப் பிரகடனங்களிலும் ரூசோவின் "சமுதாய ஒப்பந்தம்" (The Social Contract) என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. 


ஜெர்மானிய தத்துவ அறிஞர் இம்மானுவேல் கண்ட், ரஷ்ய தத்துவ அறிஞர் டால்ஸ்டாய் ஆகியோர் ரூசோவின் கருத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்; 

அரசியல், சமத்துவம், மனித உரிமைகள் பற்றிய சீரிய சிந்தனைகளை வழங்கிய 'சமுதாய ஒப்பந்தம்' எனும் நூல் உலகையே குலுக்கியது! நாத்திகன், மதவிரோதி, பைத்தியக்காரன், வெறிபிடித்த ஓநாய் என்றெல்லாம் அவர் இகழப்பட்டு, நூல்களும் தீயிட்டுக் கொளுத்தப் பட்டன. நாடு கடத்தப்பட்டு, விரட்டி அடிக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை துன்பமும் துயரமும் மிக்க, நிம்மதியற்ற வாழ்வு வாழ்ந்ததாகவே வரலாறு கூறுகிறது. அவர் வாழ்நாளில் சந்தித்த துன்பங்களும், ஏச்சுகளும் பின்னாளில் அவரின் பெருமையை மறைத்துவிட முடியவில்லை.


வால்டேர் எழுத்து 

'ஒரு நாடு சிந்திக்கத் தொடங்கி விட்டால் அந்த நாட்டை எந்த சக்தியாலும் நிறுத்தி வைக்க முடியாது' என்றார் பிரெஞ்சு நாட்டுத் தத்துவ அறிஞரான வால்டேர். 'ஆலயத்தின் நிழலில் அநீதிமன்றம் நடத்தாதே! மூடக்கொள்கைகளை நம்பாதே!' என்று முழக்கமிட்டார். 'மனிதன் என்பவன் சுதந்திரமாகப் படைக்கப்பட்டவன். அவன் தன்னைத் தானே ஆள வேண்டும்!' என்று சொல்லி 'பொதுமக்களே விழித்தெழுங்கள்!' கைவிலங்குகளை உடைத்தெறியுங்கள்! என்ற அறைகூவல் பிரெஞ்சு மக்களின் நெஞ்சங்களிலே அனலை மூட்டியது! அவர் வழங்கிய மூன்று மூல முழக்கங்களான சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. உலக வரலாற்றில் பெரும் மாற்றத்தையே நிலைபடுத்தியது. 

1791 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் எரிமலை பொங்கி எழுந்தபோது, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருந்த 'வால்டேரின்' உடலைப் புதைக்குழியிலிருந்து வெளியில் தூக்கிக்கொண்டு வந்த பல்லாயிரக்கணக்கான புரட்சிப் படையினர் ஊர்வலமாகச் சென்று கொடுங்கோன்மையின் மகுடமாக விளங்கிய 'பாஸ்டில்' சிறைக் கோட்டத்தைத் தரைமட்டமாக்கினார்கள். அந்த அழிவுக்குவியல் மீது வால்டேர்  உடலை ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து அடுத்த நாள் எடுத்துச் சென்று கல்லறை கட்டி, அதில் வைத்தார்கள். அங்கே 'இவர் மனித மனத்திற்குச் சிறகுகளைத் தந்தார், மாபெரும் உணர்ச்சிக் கனல் மூட்டினார். உரிமை வாழ்விற்கு எங்களை தயாரித்தார்'. என்று சொல்லி யாவரும் நன்றி உணர்வோடு அந்த நினைவிடத்தைப் போற்றி வருகின்றனர். 


வால்டேர் 1694 இல் பாரிஸ் நகரில் பிறந்தார். அவரது இயற்பெயர் பிரான்சிஸ்மரே அருவே. வெகு நோஞ்சான் குழந்தையாக இவரைப் பெற்ற தாய் அவரைக் கவனித்துக் கொள்ள வாய்ப்பு இன்றி ஏழு ஆண்டுகளிலேயே உயிர் நீத்தார். உடல் பலவீனம் மன எழுச்சிக்குத் தடையாக இல்லை. இளம் வயதிலேயே சமூகத்தின் அவலங்களைக் கண்டு மனம் பதறி சீற்றம் கொண்டு எழுத்தத் தொடங்கினார். அவரது அனல் பறக்கும் எழுத்துக்களை படித்த பிரெஞ்சு இளைஞர்கள் ஆவேசம் கொண்டு எழுந்தனர். ஆட்சி பீடம் ஆத்திரம் கொண்டு 'அருவே'யை பாஸ்டில் சிறைச்சாலையில் அடைத்தது. அந்த இருண்ட சிறைச்சாலைக்குள்ளேயிருந்து பிரெஞ்சுப் புரட்சியின் தீச்சுடர்கள் எழுத்துக்களாக வெளிவந்தன. அப்போது வால்டேர் என்ற பெயரிலே எழுதினார். அந்த பெயரே நிலைத்து விட்டது. 


அவர் சொன்னார் 'இந்தியர்கள் எல்லாம் அதிசாதுவான மனிதர்களாக இருந்து வருகின்றார்கள். அவர்களுடைய மதமும் சீதோஷ்ண நிலையும் அவர்களை அமைதியுள்ள சாதிப்பிராணிகளாக வளர்த்திருக்கின்றன. நம்முடைய ஆட்டுத் தொழுவங்களிலும் புறாக்கூடுகளிலும் வெட்டியழிப்பதற்க்காகப் பிராணிகளை வளர்கிறோமே அதுபோலவே தான் இந்தியர்கள் என்றும் கூறியுள்ளார்.

மனிதனின் சிந்தனைச் சுதந்திரதிற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிய அப்பெருமகன் தமது 83 ஆம் வயதில் 30.05.1778 - அன்று 'என் எதிரிகள் மீது எவ்வித வெறுப்புகளின்றி மூட நம்பிக்கைகளை எதிர்த்துக்கொண்டே சாகிறேன் - வால்டேர்'. என்று எழுதி கையொப்பமிட்டு விட்டு முடிவெய்தினார்.


இரு பெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய உரையாடல்     


லக இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கலிலியோ கலியை 'நவீன இயற்பியலின் தந்தை (Father of Modern Physics) என்று புகழ் மாலை சூட்டியுள்ளார்கள். இந்த புகழ் மாலைக்குத் தகுதியான கலிலியோ 1632 ஆம் ஆண்டு 'இரு பெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய உரையாடல்' (Dialogue of the Two Principal Systems of the world) என்னும் நூலை எழுதி முடித்து வெளியிட்டார்.  


இந்நூலைப் படித்த ரோம் மதவாதிகளுக்குக் கோபம் வந்துவிட்டது. இந்நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி மதவாதிகள் கட்டளையிட்டனர். நூலுக்கு தடையும் விதித்தனர். கலிலியோவுக்குத் தண்டனையளித்த செய்தியினை எல்லா பல்கலைக்கழகங்களிலும் வாசிக்கப்படி வேண்டும் என்றும் கட்டளையிட்டனர். 

இந்நூலில் போலந்து விஞ்ஞானி கோப்பர்நிகசின் (copernicus 1473 - 1543) சூரிய மைய கொள்கையை உயர்வாகப் பல ஆதாரங்களுடன் நிரூபித்து உயர்வாக எழுதியுள்ளார். கலிலியோ தம் கைப்பட அமைத்த தொலைநோக்கி மூலம் அண்ட கோள்களின் நகர்சிகளைக் கண்டதையும் சோதித்தையும் எடுத்துக் காட்டி கோப்பர்நிகசின் சூரிய மைய கொள்கையே மெய்யானதாக விளக்கியுள்ளார். 

தொலைநோக்கி மூலம் முதலில் நிலவில் மலைகளையும் குழிகளையும் கண்டார். பால் மய வீதியில் (Milky way) கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதையும் கண்டார். வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார். ஒளிவீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு வெள்ளியும் சூரியனைச் சுற்றி வருகிறது என முதன்முதலில் சோதனை மூலம் காட்டி தாலமியின் 'பூமைய கொள்கை' பிழையானது என்றும் கூறியுள்ளார். 

கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளைத் தான் மட்டுமே முதன்முதலில் கண்டதற்காக ஆனந்தப்படுகின்றார் கலிலியோ. ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப்படுபவர் கலிலியோ. இந்நூல் விண்வெளி ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் முதல் நூலாகும். விண்வெளி ஆர்வலர்களும் பிறரும் கட்டாயம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய நூலாகும். 


'டாவின்சி புதிரும்' காலனித்துவக் கடவுளின் இறுதிச் சடங்கும்  

Blinding ignorance does mislead us.
O! wretched mortals, Open your eyes!

'டாவின்சி புதிர்' பற்றி முதலில் ஒன்றை குறிப்பிட்டு விட வேண்டும். ஹாரி பார்ட்டர் நாவல்களை விடவும் அதிகம் விற்பனையாகி ஒரு வெகுஜன நாவலாக ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் விற்பனையில் அசுர சாதனை படைத்துள்ளது. The Da-Vinci code. நூலாசிரியர் டான் பிரெளனே குறிப்பிடுவது போல பல ஆண்டுகளின் தீவிர களப்பணியும் பொறுமையாகத் தொடர்ந்த ஆய்வும் இதன் வெற்றிப் பின்னணி என்றாலும் ரத்தத்தை உறைய வைக்கும் மர்ம முடிச்சிகளைக் கொண்டு உலக அரசியலையும் மதத்தின் முகமூடியையும் சேர்த்தே கிழித்திருப்பதற்க்கு நேரடி காரணி ஒன்று உண்டு: அதன் நடை. 



லியோனார்டோ டாவின்சி! மனித வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று இந்த பெயர். ஓவியம், எழுத்து, பொறியியல் கண்டுபிடிப்பு, வான சாஸ்திரம், புவியியல், கட்டிடவியல், இசைக்கருவிகள்... என அனைத்துக்த் துறைகளின் வல்லுநர். இன்னமும் பல மர்ம முடிச்சுகளைக் காலம் அந்தப் பெயரைப் பற்றி அவிழ்த்தபடியே உள்ளது. கி.பி 1452 க்கும் 1519 க்கும் இடையில் வாழ்ந்து கலை மறுமலர்ச்சி ஏற்படுத்திய இந்த அறிவு ஜீவித சிகரம் தனது மோனோ லிஸா ஓவியத்தில் கண்ட சிரிப்பில் புதைந்துள்ளதைப் போலவே வாழ்விலும் பல மர்ம முடிச்சுகளை ஒளித்து வைத்துக் கொண்டுள்ளதாக பலரும் நம்புகிறார்கள். தன்னைக் கட்டாயப்படுத்தி தேவாலய ஓவியங்களை வரைந்து வாங்கியவர்கள் மீதான விமர்சனங்களைத் தனது ஓவியத்திற்க்குள்ளேயே ஒளித்து வைத்தது; புதிர்களை விடுவிப்பதில் சூரரான டாவின்சி நீண்ட அறிவியல் கூறுகளைக் கூட வினோத சமிக்ஞை மொழிகளில் எழுதி அசத்தியது (உதாரணமாய் வானூர்தி குறித்த அவரது அசாத்தியக் குறிப்புகளை முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக எதிரொளித்து வாசித்தால் மட்டுமே புரியும்!) போன்ற கூறுகளில் அடங்கியுள்ளது. 

ஃ புளோரென்டைன் நகரில் டாவின்சி ஒரு ஓவிய ஸ்டுடியோ கடைப்பையனாக எடுப்பு வேலை பார்த்த பிரபல ஓவியர் ஆண்டியேல் டெல் வேரோச்சி (மார்பிள் கல் சிலை வடிப்பதில் சூரர்) கூட நூறு சதவிகித கிறித்துவரல்லர். வேரோச்சியின் 'கிறிஸ்துவின் ஞானஸ்நானம்' ஓவியம் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. அந்த ஓவியத்தில் மண்டியிட்ட தேவதை படம் மட்டும் முழுக்க முழுக்க டாவின்சி வரைந்தது. சர்ச்சை மண்டியிடும் தேவதை மட்டுமல்ல; இயேசுவை மண்டி இட வைத்ததுதான்! 

அடுத்த சர்ச்சை இயேசுவின் 'கடைசி பகிர்தல்' (The Last Supper). இந்த ஓவியம் அமைந்த இடமே சர்ச்சைக்குரியது. மிலானினுள்ள சாண்டா மாரியா! சுவரில் ஓவிய பசை சரியாகப் பதியவில்லை என்று உண்மை ஓவியம் அழிக்கப்பட்டது. 'உங்களில் ஒருவர் என்னைக் காட்டிக் கொடுப்பீர்' என்று கூறுவார் கிறிஸ்து. காட்டிக் கொடுத்தவர் வேறு யாருமல்ல டாவின்சி தான்! 


பல நூற்றாண்டுகளுக்குக் குடைந்து குடைந்து எடுத்த ஆதாரங்கள் ஒன்றிரண்டு அல்ல. இந்த The Last Supper ஓவியத்தில் இயேசுவிற்கு வலதுபுறம் உற்று நோக்கினால் இயேசு போலவே உடையணிந்த... ஒரு பெண் வரையப் பட்டுள்ளாள். அவள் யார்? ஏன் டாவின்சி இப்படிச் செய்தார். இயேசுவின் கையிலா.. அப்பெண்ணின் கையிலா.. கோப்பை யார் கையில் உள்ளது? ஓவியத்தில் தெளிவில்லை... வழக்கம் போல தனது பாணியில் அறையின் கூரைகளில் தனக்கேயான அரசியலைச் செய்திகளாக்கி நுணுக்கி எழுதி இருக்கிறார்... இப்படி பல புதிர் வியூகங்கள்.

டாவின்சியின் மதத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணி என்ன? 'தி பியரி சியான்' எனும் முந்தைய கிறித்துக்களின் ரகசிய அமைப்பு. இந்த அமைப்பு புதிய ஏற்பாட்டின் அரசியல் சூழ்ச்சிகளை எதிர்த்ததோடு முந்தைய பெண் சார்ந்த கிறித்துவத்தின் ஒழித்துக் கட்டப்பட்ட சடங்குகளை ரகசியமாக பின்பற்றவும் செய்தது. ஐசக் நியூட்டன், விக்டர் ஹீகோ மற்றும் டாவின்சி உட்பட பலரை உறுப்பினர்களாகக் கொண்ட மாற்று கிறித்துவ அமைப்பாக ரகசியமாய் 'தி பியரி சியான்' செயல்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. டான்  பிரெளன் தனது நாவலின் அடித்தளமாக 'தி பியரி சியானின்' அமைப்புச் செயல்பாடுகளை வைத்திருப்பது தான் டாவின்சி புதிர் நாவலுக்கு அதீத நாத்திக தன்மையைத் தருகிறது. 

**************

                                         
"எப்போதும் நல்ல புத்தகத்தைப் படியுங்கள். அதை பாதி படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு வேளை நீங்கள் இறந்து போனாலும், அப்போதும் இனிமையான முகம் கொண்டு இருப்பீர்கள்" - ஓ'ரூர்கே


1 comment:

  1. சிறப்பு வாழ்த்துக்கள்
    உங்கள் வீட்டில் நல்ல புத்தகங்கள் திருடப்படுகின்றனவா? நீங்கள் நல்ல நண்பர்களை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.
    உங்கள் வீட்டில் உள்ள புத்தகங்கள் தூசி படிந்து இருக்கிறதா ? உங்களுக்கு எந்த நண்பர்களும் இல்லை என்று அர்த்தம்...
    எப்போது நல்ல நண்பர்களை சந்திக்க போகிறீர்கள்..

    ReplyDelete